Wednesday, November 9, 2011

மனிதனின் வெற்றி அவன் மனோபாவத்தில்! (2)

யாரிடம்

தன்னம்பிக்கை தலைநிமிர்ந்து சிறக்கிறதோ
மனித நேயம் மகிழ்வொடு நிலவுகிறதோ
பொறை உடைமை மிகுந்து மிளிர்கின்றதோ
அமரருள் உய்க்கும் அடக்கம் ஆளுகை புரிகிறதோ
உள்ளுதல் எல்லாம் உயர்வாகவே நிற்கிறதோ
செய்யும் செயல்களின் விளைவுகளெல்லாம் நேர்மறையாகவே அமையும் என்ற நம்பிக்கை தலை சிறந்து காணப்படுகிறதோ
அவரே 'நேர்மறை மனப்பாங்காளன்' என இனம் கண்டு கொள்ளலாம்.

அடுத்தவர் மேல் அவர் தாக்கம்:

இச்சமுதாயத்தில் சிறந்த சூழ்நிலையை உருவாக்குவதில் நேர்மறை மனப்பாங்காளர்களின் பங்கு மிகச்சிறந்தது. சமுதாயத்தில் அவர்களது தாக்கம் மின்னல் தாக்கம்! அந்தத் தாக்கம் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது?

அவர் பணியாற்றும் இடத்திலும், அவரோடு பணியாற்றுபவர்களிடமும் உற்பத்தித்திறன் உயரும், ஆற்றும் பணியின் தரம் உயரும். குழு உணர்வும், குழுப் பணியும் வளரும் சுமுகமான சூழ்நிலை உருவாகும் மகிழ்வான உறவுகள் மலரும் – தொடரும் மன அழுத்தம் குறையும் - மறையும். இத்தகு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நேர்மறை மனப்பாங்கு ஒருவரின் ஆளுமையை வளர்த்து, அவரைச் சமுதாயத்தின் விலைமதிப்பற்ற செல்வமாக ஒளிரச்செய்யும் என்பது வெள்ளிடைமலை!

எதிர்மறை மனப்பங்காளரின் இயல்புகள்:

துன்பமே எந்நாளும் இன்பமில்லை என்ற எண்ணம்
இந்த உலகில் வாழ இயலாது என்ற முடிவு.
அனைவருமே எதிராளிகள் என்ற அசைக்கமுடியா நினைவு.
கடுமையான மன அழுத்தம்.
'வாழ்க்கை என்பது போராட்டம் அதில் வெற்றி காண்பது திண்டாட்டம்' எனும் அசைக்கமுடியாத அவனம்பிக்கை.

எங்கும், எப்பொழுதும், சதிசெய்யும் சூழ்நிலை என்ற ஆழ்மன அச்சம்.அவரது தாக்கம்:

தனக்கும் மகிழ்ச்சியில்லை, பிறர் மகிழ்ச்சிக்கும் தடை.
நட்பை இழக்கச் செய்யும்.
எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா என்ற மாளாத வேதனை.
உற்பத்தித் திறன் குறைதல்
'எங்கும் தோல்வி, எதிலும் தோல்வி ' என்ற எதிர்மறை எண்ணங்கள், செயல்கள். மனிதனின் வெற்றி அவன் மனப்பான்மையில் எனக் கண்டோம். மனப்பான்மை என்பது என்ன, மனப்பான்மை எப்படி உருவாகிறது, நேர்மறை, எதிர்மறை மனப்பாங்காளரின் இயல்புகள், அவரால் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கங்கள் ஆகியவற்றை விரிவாகக் கண்டோம்.

இனி நேர்மறை மனப்பாங்கை எப்படி உருவாக்கிக் கொள்வது, வளர்ப்பது, தக்கவைத்துக் கொள்வது என்பதைச் சிறிது நோக்குவோம்.

மனப்பான்மை என்பது பரம்பரைச் சொத்து அல்ல, ஊழ்வினையின் ஆக்கமல்ல, ஆனால் முயன்று பெறும் பண்பு எனப்பார்த்தோம். நேர்மறை மனப்பாங்கை முயன்று பெறலாம். முயற்சி செய்யும் முன்னர் நேர்மறை மனப்பாங்கின் இயல்பு, சிறப்பு முதலியவற்றை நன்கு மனதார உணர வேண்டும், ஏற்க வேண்டும், ஆக்கபூர்வமான வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

நேர்மறை மனப்பான்மையை வளர்ப்பது எப்படி?முதற்கண் உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள்.இறைவன்/இயற்கை மேல் நம்பிக்கையை வளருங்கள்.சமுதாயத்தின்மேல் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.நேர்மறை மனப்பான்மையின் இன்றியமையாமையை முழுமனத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.இறைவன் படைப்பில், இயற்கையின் படைப்பில் நல்லவை, தீயவை இரண்டுமே இருப்பது இயற்கை. நல்லதையே காணும் பார்வையை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர் இடத்தில் நம்மை வைத்து, அவர்கள் பார்வையில் நாம் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் இதை 'எம்பதி' என்று கூறுவர்.

நல்ல பழக்க வழக்கங்களை, முன்னோர்கள் காட்டிய நல்ல வழக்கங்களை, உலகம் பழிப்பதை ஒழித்துவிடும் பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். இம்முயற்சிகளை நாளைக்கு என்று ஒத்திவைக்காமல் இன்றே மேற்கொள்ள வேண்டும்.இயற்கையிடத்தும், இறைவனிடத்தும், மக்களிடத்தும் சமுதாயத்திடமும் நம்பிக்கையையும், நன்றி உணர்வையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.அனைவரிடத்தும் அன்பு பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும்.நேர்மறையான சுயமதிப்பீட்டை வலிமைப் படுத்திக் கொள்ளவேண்டும்.
தீய எண்ணங்களை, தீயவர்களை ஒதுக்கி, நல்ல எண்ணங்களையும், நல்லவர் நட்பையும் நாடிப்பெற வேண்டும். நல்ல இலக்கியங்களையும், எழுத்தோவியங்களையும் படித்துப் பயன் பெறவேண்டும்.இந்தத்திசையில் முன்னேற்றம் காண தமிழ் மூதாட்டி காட்டிய சிலபடிகள்!

அனந்தல் ஆடேல்:ஆறுவது சினம்
ஊக்கமது கை விடேல்
ஒப்புறவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஒளவியம் பேசேல்
கண்டு ஒன்று சொல்லேல்
ஞப்போல் வளை
ஞயம்பட உரை
இணக்கம் அறிந்து இணங்கு
வஞ்சகம் பேசேல்
அழகு அலாதன செயேல்
அரனை மறவேல்
தீவினை அகற்று
கடிவது மற
காப்பது விரதம்
கிழமைப்பட வாழ்
கீழ்மை அகற்று
குணமது கைவிடேல்
கூடிப் பிரியேல்
கெடுப்பது ஒழி
கேள்வி முயல்
கொள்ளை விரும்பேல்
கோதாட்டு ஒழி
சக்கரநெறி நில்
சான்றோர் இனத்திரு
சூது விரும்பேல்
நேர்பட ஒழுகு

இன்னும் பலப் பல!

பாரதியார் காட்டும் வழி.

அச்சம் தவிர்
உடலினை உறுதி செய்
எண்ணுவது உயர்வு
ஒப்புதல் ஒழி
கற்றது ஒழுகு
காலம் அழியேல்
கீழோற்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
சிதையா நெஞ்சு கொள்
செய்வது துணிந்து செய்
செளரியம் தவறேல்
தன்மை இழவேல்
தீயோர்க்கு அஞ்சேல்
தோல்வியில் கலங்கேல்

இன்னும் பல!

பாரதி தாசன் காட்டும் படிகள்!

ஊன்றுளம் ஊறும்
குள்ள நினைவு தீர்
கூன் நடை பயிலேல்
கெடு நினைவு அகற்று
சீர்பெறல் செயலால்
சோர்வு நீக்கு
மாறுவது இயற்கை

இன்னும் பல!

வள்ளுவர் காட்டும் வழி!

அகம் தூய்மை வாய்மையால் காணப்படும்
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை
அஞ்சாமல் அல்லால் துணை வேண்டா
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்
அழுக்கற்று அகன்றாரும் இல்லை
அறிவு அற்றம் காக்கும் கருவி
இடுக்கண் வருங்கால் நகுக
உள்ளது அனையது உயர்வு
உள்ளற்க உள்ளம் சிறுகுவ
எனைத்தானும் நல்லவை கேட்க
செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க
தன்னைத்தான் காக்கின் சினம் காக்க
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்
பற்றுக பற்றற்றான் பற்றினை
பெருக்கத்து வேண்டும் பணிதல்
பொய்யாமை அன்ன புகழ் இல்லை
மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது
மருவுக மாசற்றார் கேண்மை

இன்னும் பலப்பல!

மனிதனின் வெற்றி அவன் மனப்பான்மையில்! நேர்மறை மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோம்! வையத்து வாழ்வாங்கு வாழ்வோம்!

மனப்பான்மை உங்களது உயர்வை நிர்ணயிக்கும்
உயர்ந்த எண்ணம் உங்களது செயல்களை நிர்ணயிக்கும்
செயல்பாடுகள் உங்களது நடத்தையை நிர்ணயிக்கும்
நடத்தை உங்களது ஆளுமையை நிர்ணயிக்கும்
ஆளுமை உங்களது வெற்றியை நிர்ணயிக்கும்!

வெற்றி வீரராக, சாதனையாளராகத் திகழுங்கள்!

No comments:

Post a Comment