Wednesday, November 9, 2011

கீதையில் மனித மனம்


கீதையில் மனித மனம் 'கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்' நூலிலிருந்து அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.மனிதனின் மனதைப் பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.கண்ணன் சொல்கிறான் :"அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப - துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு."அர்ஜுனன் கேட்கிறான் :"மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை. காரணம், உள்ளம் சஞ்சலமுடையது.""கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது,"பகவான் கூறுகிறான் :"தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்க முடியும்."இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் :"கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோலப் பல திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்."- மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பதுபற்றி பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியானயோகமாகும்.சகல காரியங்களுக்கும் - இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நன்மைக்கும் தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும், புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.பகுத்தறிவையும் மனம் ஆக்ரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான். கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது. அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.எந்த அனுபவங்களையும் கொண்டு வருவது மனம் தான்.இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்களை அழித்துவிடுகின்றன.உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.என்ன இந்த மனது?காலையில் துடிக்கிறது. மதியத்தில் சிரிக்கிறது. மாலையில் ஏங்குகிறது. இரவில் அழுகிறது.
"இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்." என்றிருக்க மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.கடிவாளம் இல்லாத இந்த மனக் குதிரையை அடக்குவது எப்படி?"வைராக்கியத்தால் முடியும்" என்கிறது கீதை. அதையே சொல்கிறார் பகவான் ராமகிஷ்ணர்.அது என்ன வைராக்கியம்உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது எந்த நிகழ்ச்சிகளுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது.மெழுகு போல் இருக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கவிடுவது.ஆசாபாசங்களில் இருந்து மனதை மட்டும் ஒதுக்கி வைத்து விடுவது. பந்த பாசங்களில் இணங்கிவிடாமல் இருப்பது.பற்றறுப்பது, சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்ற முடிவுக்கு வருவது.ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டிவைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டு கொள்வது.துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்களை அலட்சியப்படுத்துவது.இன்பமான விஷயங்களைச் சந்தேகமில்லாமல் ஏற்றுக் கொள்வது.பிறர் தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது, மன்னித்துவிடுவது.முயற்சிகள் தோல்வியுறும்போது, இதற்கு இறைவன் சம்மதிக்கவில்லை. என்று ஆறுதல் கொள்வது.கணநேர இன்பங்களை அவை கண நேர இன்பங்களே என்று முன் கூட்டியே கண்டு கொள்வது.ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே" என்ற சமநோக்கத்தோடு பார்வையைச் செலுத்துவது.காலையில் இருந்து மாலை வரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று அமைதி கொள்வது.சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால் எப்படி இது முடியும்?பகவத் தியானத்தால் முடியும்.அதிகாலையில் ஓர் அரைமணி நேரம், இரவிலே ஓர் அரைமணி நேரம், கோவிலிலோ வீட்டுப் பூஜை அறையிலோ தனிமையில் அமர்ந்து வேறு எதையும் நினைக்காமல் இறைவனையே நினைப்பது.இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மனம் வேறு திசையில் ஓடினால் அதை இழுத்துப் பிடிப்பது.பாசத்திலே மூழ்கிக் கிடந்த பட்டினத்தார் `ஞானி' யானது இப்படித்தான்.
தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர், ஆண்டவனின் திருப்புகழைப் பாடியதும், இப்படித்தான்.இயற்கையாகவே கல்வியாற்றல் பெற்றிருக்கும் ஒரு கவிஞன், ஒரு பொருளைப் பற்றிக் கவிதையில் சிந்திக்கும் போது, அவன் மனம் கவிதையிலேயே செல்கிறது.அதில் லயிக்கிறது, ரசிக்கிறது, சுவைக்கிறது.அப்போது ஓர் இடையூறு, குறுக்கீடு வந்தாலும் அவனுக்கு ஆத்திரம் வருகிறது.கண்கள் திறந்திருக்கின்றன. மனம் கவிதையில் ஆழ்ந்து கிடக்கிறது. அப்போது திறந்த கண்ணின் எதிரில் நிற்கும் மனைவிகூட அவன் கண்ணில் படுவதில்லை.மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையை நோக்கி வில்லெடுக்கும் வேடனின் கண்களில் பறவை மட்டும் தெரியுமே தவிர, மரத்திலுள்ள இலைகள், காய்கள், கனிகள் தெரிவதில்லை.கவிஞனுக்கும் வேடனுக்கும் சாத்தியமான மனதின் ஒருமுக நிலையை மற்றவர்களும் பெற முடியும்.அதாவது ஒன்றையே நினைத்தல்.அந்த லயம் கிட்டிவிட்டால் புலன்களும், பொறிகளும் செயலற்றுப் போகின்றன.வாயின் சுவை உணர்வு, நாசியின் மண உணர்வு, கண்களின் காட்சி உணர்வு, செவியின் ஒலி உணர்வு, பிற அங்கங்களின் ஸ்பரிச உணர்வு அனைத்தையும் அடித்துப் போட்டுவிட்டு, புலியைக் கொன்ற வேடன் போல் மனது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதுதான் சரியான லயம்.சங்கீத வித்வான் சரித்தர ஆராய்ச்சி செய்வதில்லை. ஸ்வரங்களையும் ராகங்களையுமே ஆராய்ச்சி செய்கிறான்.ஒரே இடத்தில் ஒரே நிலையில் மனத்தைச் செலுத்தினால் சலனமில்லாத ஒரே உணர்ச்சி தோன்றுகிறது.ஒரு கதை உண்டு!ஒரு தாய் தனது ஒரு மாதக் கைக்குழந்தையோடு தரையிலே பாய் விரித்துப் படுத்திருந்தாள். அப்போது அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் பாம்பு வந்து நின்றது.பாம்பைக் கண்ட உறவினர்கள் பதறினார்கள். துடித்தார்கள்.அந்தப் பாம்பு குழந்தையையும் தாயையும் கடித்து விடப்போகிறதே என்று பார்த்தார்கள்.தாயின் பெயரைச் சொல்லி சத்தமிட்டார்கள். தாய் எழவில்லை. பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் மீது ஒரு மல்லிகைப் பூவை எடுத்துப் போட்டார்கள். தாய் உடனே விழித்துக் கொண்டு, அந்தப் பூவை எடுத்து அப்புறம் போட்டாள்.
தன்னை உதைத்தபோது கூடச் சொரணையில்லாது உறங்கிய தாய், குழந்தை மீது பூ விழுந்ததும் விழித்துக் கொண்டது எப்படி?அந்த உள்ளம் குழந்தையிடமே லயித்துக் கிடந்ததால்தான்.ஈஸ்வர பக்தியில் உடல் உருக, உள்ளம் உருக லயித்துக் கிடந்த அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்தியவர்களே.இந்த மனதின் கோலங்களாலேயே நான் பலமுறை தடுமாறி இருக்கிறேன்.ஆசைக்கும் அச்சத்துக்கும் நடுவே போராடி இருக்கிறேன்.ஜனனம் தகப்பனின் படைப்பு, மரணம் ஆண்டவனின் அழைப்பு, இடைப்பட்ட வாழ்க்கை அரிதாரம் பூசாத நடிப்பு என்பதை, நாளாக நாளாக உணர்ந்து வருகிறேன்.இன்னமும் முழுப்பக்குவம் கிட்டவில்லை.திடீர் திடீரென்று மனதில் ஒன்றிருக்க ஒன்று பாய்கிறது.ஒன்றை எடுத்தெறிந்தால், இன்னொன்று ஓடி வருகிறது.ஒரேயடியாக மிதித்துக் கொன்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்பது தெரிகிறது.என் கால்கள் இன்னும் அந்த வலுவைப் பெறவில்லை. பெற முயல்கிறேன். பெறுவேன்.பிறந்தோருக்காகச் சிரிக்காமலும், இறந்தோருக்காக அழாமலும் பரந்தாமன் கூறியதுபோல் சமநோக்கத்தோடு நின்று மன அமைதி கொள்ள முயல்கிறேன்.அதை நான் அடைந்துவிட்டால், கடவுள் கண்களிலே கண்ணீர் வைத்ததற்கான காரணமும் அடிபட்டுப்போகும்.இவ்வளவையும் நான் சொல்லுவது லௌகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே இந்து மதத்தின் நோக்கம் என்பதை விளக்கத்தான்.லௌகிக வாழ்க்கையைச் செப்பனிடும் இந்து மதக் கருவிகளில் பகவத் கீதையும் ஒன்று என்பதுதான் என் துணிவு

No comments:

Post a Comment