Wednesday, November 9, 2011

மன அமைதி பெற..

நாம் அனைவரும் மிகவும் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் நம்முள்ளே தோன்றும் எண்ணங்களும், அதன் விளைவாக ஏற்படும் முரண்பாடுகளே.

நம் மனதிற்கு அமைதியளிப்பதன் மூலமாகவே மன அழுத்தத்தைப் போக்க முடியும். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது அமைதியைக் கடைபிடித்தல் நன்று.

நம்முள்ளே தோன்றும் எண்ணங்களை நிறுத்த முடியாது. அவ்வாறு தோன்றும் எண்ணங்களுடன் போரிடுவதை விடுத்து, மூ‎ன்றாம் நிலையில் இருந்து ஏற்படும் எண்ணங்களைக் கவனித்தல் வேண்டும். இதற்கு ஓஷோ அவர்கள் கூறும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

பற்றற்ற நிலை

எந்தவிதமான வேலையும் செய்யாமல் ஒரு நாளில் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருங்கள். உங்களுள் எழும் எண்ணங்களில் பங்குபெறாமல், இருவர் பேசும் உரையாடலைக் கேட்பது போல இருங்கள். உங்களுள் ஏற்படும் எண்ணங்களை தவிர்க்காமல், எதிர்க்காமல் உங்கள் எண்ணங்கள் வெளிப்பட முழு சுதந்திரம் அளியுங்கள்.

மனோவேகம்

பல காலங்களாக உங்கள் உள்ளத்தில் சேர்ந்துள்ள அனைத்து விதமான எண்ணங்களும் இதன் மூலமாக வெளிப்படும் வாய்ப்பு ஏற்படும். தேவையற்ற எண்ணங்களை வெளியேற்ற உங்கள் மனதிற்கு நீங்கள் சுதந்திரம் அளித்திருக்க மாட்டீர்கள். இது நம் எல்லோரிடமும் காணப்படுகின்ற இயல்பான ஒரு குணம். அவ்வாறான சுதந்திரத்தை உங்கள் எண்ணங்களுக்கு அளிக்கும் போது, அனைத்து விதமான தடைகளையும் தகர்த்தெறிந்து அவை வெளிப்படும்.

அமைதியாக உட்கார்ந்து அவைகளைக் கவனியுங்கள். அவ்வாறு வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங்களை மாற்ற முயலுங்கள்.

எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்
நீங்கள் தனித்திருக்கும் போது உங்களுள் ஏற்படும் எண்ணங்களை உங்களுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொல்லிப் பழகுங்கள். அவ்வாறு செய்வதன் மூலமாக உங்கள் எண்ணங்கள் மேல் உங்களுக்கிருக்கும் பயம் மற்றும் அவநம்பிக்கை நீங்கும். மேலும் எண்ணங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளப் பழகுவீர்கள். எண்ணங்களை நடுநிலையிலிருந்து உணர முடியும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெறலாம்.

No comments:

Post a Comment