Wednesday, November 9, 2011

வெற்றிகரமான தோல்விகள்

நம் அன்றாட வாழ்வில் செய்யும் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற வேண்டுமென்று நாம் விரும்புவது இயல்பு. அடுத்தடுத்து தடைகள், தோல்விகள் ஏற்படும் போது வெறுப்பு ஏற்படுவதும் இயல்பு. அது போன்று நிகழும்போதெல்லாம் நான் படித்த சில வெற்றியாளர்களி‎ன் தோல்விகளை எண்ணிப் பார்ப்பதுண்டு. அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கணிணி மூலம் 21ம் நூற்றாண்டில் உலக மக்களின் அன்றாட வாழ்வினையே மாற்றியமைத்த பெருமை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸைச் சேரும். 10 வருடங்களுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்பவர். 1970ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை.

                                                                *****

பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை கூட பயிலாதவர் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன். பிற்காலத்தில் அரசியலில் வெவ்வேறு தேர்தல்களில், வெவ்வேறு பதவிகளுக்கு 12 முறை தோல்வியடைந்தவர். ‏இருப்பினும் மனம் தளராது முயன்று, வெ‎ன்று அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியானார் என்று அறியும்போது மிகவும் ஆச்சர்யமாக உள்ளதல்லவா?

                                                                *****

ஐசக் நியூட்டன் அவர்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த கணித மேதைகளுள் ஒருவர். ஒலியியல் மற்றும் புவியீர்ப்பு விதிகள் அவரை தலை சிறந்த விஞ்ஞானியாகப் போற்ற காரணமானவை. அவர் பிறவியிலேயே அறிவாளி என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. அவர் பள்ளியில் படிக்கும்போது மிக மோசமாக படிக்கும் மாணவருள் ஒருவர். ஆசிரியர்கள் அவரைப் படிக்க வைக்க பல வகைகளில் முயன்றும் அவை தோல்வியிலேயே முடிந்தன எ‎ன்பது குறிப்பிடத்தக்கது.

                                                                *****

லுட்விக் வான் பீதோவன் உலக வரலாற்றின் தலை சிறந்த இசை அறிஞர்களுள் ஒருவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவருடைய இசைக்கு மயங்காதவர்களே கிடையாது. ஆனால் சிறு வயதில் அவருக்கு பாட்டு கற்பித்த ஆசிரியர், 'என்றுமே உன்னால் ஒரு உருப்படியான இசையமைப்பாளராக முடியாது' என்றாராம். இசையமைக்க ஆரம்பிக்கு முன்பே கேட்கும் திறனை இழந்தவர் அவர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அந்த நிலையிலும் மிக அற்புதமாக இசையளித்தார் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

                                                                *****

அன்றாட வாழ்விற்குத் தேவையான பல கருவிகளை நமக்குக் கண்டுபிடித்துத் தந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். சரித்திரம் போற்றும் விஞ்ஞானியான இவர் பெயரில் 1093 அமெரிக்க கண்டுபிடிப்பு உரிமம் உள்ளது என்றால் வியப்பாக இருக்கிறது. ஆனால் சிறு வயதில் இவருக்கு பாடம் கற்பித்த ஆசிரியர் 'உன்னால் எதுவுமே கற்க முடியாது' என்று கூறியிருக்கிறார். அவர் முதல் முதலாக உருவாக்கியது மின் விளக்கு. ‏அதை 9000 முறை பரிசோதனைகள் செய்து தோல்வி கண்ட பிறகே, கண்டுபிடிக்க முடிந்ததாம்!

                                                                *****

சில்லறைப் பொருட்களை விற்கும் வணிக நிறுவன வகையைச் சேர்ந்தது உல்வெர்த் நிறுவனம். ப்ரான்க் வின்பீல்ட் உல்வெர்த் தனது முதல் அங்காடியை 1878ஆம் தொடங்கினார். சில வருடங்களிலேயே உலகமெங்கும் கிளைகளைக் கொண்டதாக வளர்ந்தது அந்நிறுவனம். ஆனால் உல்வெர்த் 21 வயதில், இந்நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு அங்காடி ஒன்றில் பணிபுரிந்தார். அதன் உரிமையாளர் அவருக்கு வாடிக்கையாளர்களை சரிவர கவனித்துக்கொள்ளத் தெரியவில்லை என்று மட்டம் தட்டியிருக்கிறார்.

                                                               *****

மைக்கேல் ஜோர்டன் மிகச் சிறந்த கூடைப்பந்து வீரர். தனி ஒரு மனிதனாக நாட்டின் கூடைப்பந்துக் குழுவின் அமைப்பையே மாற்றியமைத்த பெருமை இவரைச் சேரும். அமைப்பில் சேர்வதற்கு முன்பு மற்றவர்களைப்போல ஒரு சாதாரண மனிதர் இவர். போதிய தகுதியில்லாத காரணத்தால் இவர் பள்ளியின் கூடைப்பந்து குழுவிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

                                                                *****

அமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் டிஸ்னி தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை, பின்னணிக் குரல், கேலிச் சித்திர உயிரூட்டம் இப்படிப் பல கலைகளில் வல்லவர். உலகின் மிகச்சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுள் ஒருவர். இன்றைக்கு வால்ட் டிஸ்னி என்ற கூட்டு ஸ்தாபனம் வருடத்திற்கு சராசரியாக 300 கோடி அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது. டிஸ்னி தன்னுடைய சுயதொழிலை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் துவங்கினார். அவருடைய முதல் கேலிச் சித்திர தயாரிப்பால் கடனாளியானார் என்பதை அறிவீர்களா? அவருடைய முதல் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர், டிஸ்னிக்கு திரைப்பட தயாரிப்பைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று கேலி செய்திருக்கிறார்
பள்ளியில் 6வது வகுப்புகூட தேர்ச்சி பெறாதவர் வின்சென்ட் சர்ச்சில். அதற்காக தன்னுடைய கடின உழைப்பை அவர் நிறுத்தவில்லை. பல போராட்டங்களுக்கிடையே இரண்டாவது உலகப் போரின்போது பிரிட்ட‎னின் பிரதம மந்திரி ஆனார். இன்றளவும் பிரிட்டன் மற்றும் உலகின் மிக முக்கியமான தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 2002ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய 'பிரிட்டனின் மிகச்சிறந்த 100 தலைவர்கள்' வாக்கெடுப்பில், அனைவராலும் மிகச் சிறந்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


*****

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் மிகப் பிரபலமான அமெரிக்க திரைப்பட இயக்குனர். சிறப்பு மிக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். மூ‎ன்று அகடமி விருதுகள் வென்றவர் இவர். என்றைக்கும் நல்ல வசூல் தரும் திரைப்படங்களை வழங்குபவர் என்று பெயரெடுத்தவர். ஆனால் சிறு வயதில் பள்ளிப்படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு மனநிலை கு‎ன்றிய சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஒரு மாதம் சென்ற அவர், அதன் பிறகு என்றுமே பள்ளிக்குச் செல்லவில்லை என்றறிவீர்களா?

*****

20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவராகப் போற்றப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறந்த பெளதீக வல்லுனர். 1921ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். இருந்தபோதிலும் சிறு வயதில் அவருடைய பெற்றோர் ஐன்ஸ்டீனை மனநிலை குன்றியவர் என எண்ணினார்கள். பள்ளியில் மிகவும் மோசமாகப் படிப்பதைக் கண்டு அவருடைய ஆசிரியர் 'நீ என்றுமே உருப்படமாட்டாய்' என்று கூறியிருக்கிறார்.

*****

1947ஆம் ஆண்டு, ஒரு வருட ஒப்பந்தம் கூட முடிவடையாத நிலையில் பிரபல ஃபாக்ஸ் நிறுவனம் மர்லின் மன்றோவை விலக்கியது. அவர் கவர்ச்சியாக இல்லை; மேலும் அவருக்கு நடிப்பும் வரவில்லை என்று தயாரிப்பாளர் கூறிவிட்டார். ஆனால், அதற்கெல்லாம் மர்லின் கலங்கிவிடவில்லை. விடாது முயன்றார். அவருடைய முயற்சியால் 20ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மற்றும் பாப் நட்சத்திரமாகவும் திகழ்ந்தார்.

*****

ஜான் கிருஷமின் முதல் நாவல் 16 பிரதிநிதிகளாலும், 12 புத்தக வெளியீட்டு நிறுவனங்களாலும் நிராகரிக்கப்பட்டது. இதனாலெல்லாம் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. சிறந்த நாவலாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும் ஆகும் வரை அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. 21ஆம் நூற்றாண்டிலும் மீடியாக்கள் அவரை மிகச் சிறந்த நாவலாசிரியருள் ஒருவராக அறிவித்தன.

*****

ஹென்றி ஃபோர்ட் ஆரம்பித்த முதல் இரண்டு நிறுவனங்களும் தோல்வியை அளித்தன. இதனாலெல்லாம் அவருடைய ஃபோர்ட் மோட்டார் கம்பெனி ஆரம்பிப்பது தடைபடவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் தொழிற்சாலை உற்பத்தியில் புரட்சி ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், 20ஆம் நூற்றாண்டின் சமுதாய வளர்ச்சியில் செல்வாக்கு பெற்றிருந்தார். அவருடைய அதிகளவு உற்பத்தி, சம்பள உயர்வு மற்றும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்குதல் போன்றவை "ஃபோர்டிஸம்" என்ற நிர்வாகப் பள்ளி ஆரம்பித்திட வழி வகுத்தது. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் புகழ்பெற்ற முதல் மூன்று பணக்காரர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

*****

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு 'டோயோடா' கூட்டு நிறுவனம் நடத்திய பொறியியலாளருக்கான நேர்முகத் தேர்வில் நிராகரிக்கப்பட்டார் சாய்சீரோ ஹோன்டா. அவர் வீட்டிலேயே தயாரித்த மோட்டார் வாகனங்களை அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் வாங்கும்வரை வேலையில்லாமல் இருந்தார். பிறகு தன்னுடைய சொந்த நிறுவனமான ஹோன்டாவை ஆரம்பித்தார். அந்நிறுவனம் இன்று உலகிலேயே மிக அதிகமாக மோட்டார் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. அது மட்டுமல்லாது மிகப்பெரிய வாகனத் தயாரிப்பாளர்களான ஜீஎம் மற்றும் கிருஸ்லர் நிறுவனங்களை விட அதிக லாபம் ஈட்டும் வாகனத் தயாரிப்பாளர் என்று பெயர் பெற்றிருக்கிறது. உலகில் 437 இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள ஹோன்டா நிறுவனம் அன்றாட வாழ்விற்குத் தேவையான வாகனங்கள் முதல் பந்தயத்தில் கலந்து கொள்ளும் கார்கள் வரை தயாரிக்கிறது.

*****

அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மின்சாரப் பொருட்களைத் தயாரிக்கும் சோனி கூட்டு நிறுவனத்தின் உரிமையாளர் அகியோ மொரீடா. அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான அரிசியை சமைக்கும் பாத்திரம் 100க்கு மேல் விற்பனையாகவில்லை. அரிசி அதிகமாக வெந்து போனதே அதற்குக் காரணம். ஆனால், அவருடைய விடாமுயற்சியினால் நிறுவனத்தின் வருமானம் ஆண்டொ‎ன்றிற்கு 660 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது.



No comments:

Post a Comment